உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் ஆயுஷ்மான் பாரத் - பூடானில் பிரதமர் மோடி பெருமிதம்

பூடானில் உள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

திம்பு:

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அவருக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பூடான் பிரதமர் லொட்டே ஷெரிங் மற்றும் பூடான் மன்னரையும் சந்தித்துப் பேசினார். அங்கு இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் 2-வது நாளில் அவர் பூடானில் உள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பூடான் நாட்டின் இயற்கை அழகு, ரம்மியம், மக்களின் எளிமை ஆகியவை அனைத்துத் தரப்பினரையும் கவரும். பூடானுக்கும், இந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய பிணைப்பு இருப்பது இயற்கையானது. புவியியல் ரீதியாக மட்டுமின்றி வரலாறு, கலாசாரம், ஆன்மிக பண்பாடுகளால் இரு நாட்டு மக்களிடையே தனித்துவம் வாய்ந்த பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் 500 மில்லியன் இந்தியர்களுக்கும் சுகாதார காப்பீட்டை வழங்கி உள்ளது. உலகிலேயே மிக குறைந்த விலையில் டேட்டா இணைப்பு இந்தியாவில் கிடைக்கிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானவர்கள் பலனடைந்துள்ளனர்.

பூடானின் சிறிய ரக செயற்கைகோளை ஏவுவதற்காக பூட்டானிய விஞ்ஞானிகள் இந்தியா வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களில் பலர் விஞ்ஞானிகளாகவும், இன்ஜினியர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் விரைவில் வருவீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com