

திருச்சி:
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் நந்தகுமார் (வயது 17), பிளஸ்-2 மாணவர். இவர் கடந்த மாதம் 23-ந்தேதி நண்பர்களுடன் திருச்சி குட்ஷெட் யார்டு பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பந்து , அங்கு நின்ற சரக்கு ரெயில் பெட்டியின் மேல் விழுந்தது. அதனை எடுப்பதற்காக நந்தகுமார் ரெயில் பெட்டியின் மேல் ஏறினார். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பி, நந்தகுமார் மீது உரசியதில் அவர் உடல் கருகி பலத்த காயமடைந்தார்.
உடனே அவரை நண்பர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை நந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் திருச்சி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews