பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை திருமணம் செய்த ரெயில்வே ஊழியர்

தூத்துக்குடியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை ரெயில்வே ஒப்பந்த ஊழியர் திருமணம் செய்துகொண்டார். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #TransgenderMarriage
திருநங்கை ஸ்ரீஜா நெற்றியில் திலகமிட்ட மணமகன் அருண்குமார்
திருநங்கை ஸ்ரீஜா நெற்றியில் திலகமிட்ட மணமகன் அருண்குமார்
Published on

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா (20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.

அதன்படி, அக்டோபர் 31-ந் தேதி (நேற்று) தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.

இதையடுத்து, மணமக்கள் நேற்று காலை சிவன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகள், அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து இருந்தனர். அருண்குமாரின் பெற்றோர் வரவில்லை.

மணமக்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறினர்.

ஆனால், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளதாகவும், எனவே சட்டப்படி இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறி திருமண வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், திருமணத்தை வேண்டுமானால் கோவிலில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கான பதிவு சான்றிதழை தரமுடியாது என்று கூறினார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த திருநங்கைகள் இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் முறைப்படி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அருண்குமாரிடம், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்ததற்கான அரசாணை நகல் இருந்தால் கொடுங்கள், அதிகாரிகளிடம் பேசி திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அருணிடம் அதற்கான நகல் ஏதும் இல்லை.

அதே நேரத்தில் முகூர்த்த நேரம் முடியும் சூழல் உருவானது. எனவே திருமணத்தை முதலில் முடித்துவிட்டு, சான்றிதழ் விவகாரத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மணமக்கள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ‘தற்போது திருமணம் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தனர்.  #TransgenderMarriage

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com