லண்டன் விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானத்தில் அதிகாரிகள் சோதனை

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்திகளை லண்டன் அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்து சோதனை நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானத்தில் அதிகாரிகள் சோதனை
Published on

லண்டன்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் (எண் 785) நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மதியம் 2.50 மணிக்கு வந்து சேர்ந்தது.

அப்போது அங்கு இங்கிலாந்து அரசு அதிகாரிகள் வந்தனர்.

விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய உடன் இங்கிலாந்து அதிகாரிகள், அந்த விமானத்தின் சிப்பந்திகள் 14 பேரையும் முழுமையாக பரிசோதித்தனர். அந்த விமானத்திற்குள்ளும் அவர்கள் சென்று அங்குலம் அங்குலமாக சோதனை போட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களை பிடித்துச்சென்று கிட்டத்தட்ட 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மசூத் தஜ்வார் நேற்று கூறுகையில், “எதற்காக எங்கள் விமான நிறுவனத்தின் சிப்பந்திகளை பிடித்து வைத்து அதிகாரிகள் விசாரித்தார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை” என்றார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில்தான் அந்த விமான நிறுவனத்தின் சிப்பந்திகளை இங்கிலாந்து அதிகாரிகள் பிடித்து வைத்து விசாரித்ததாக ‘ஜியோ நியூஸ்’ தெரிவித்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com