

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தல்புர், பாகிஸ்தான் பங்குச்சந்தை முன்னாள் தலைவர் ஹுசைன் லவாய் உள்பட மொத்தம் 19 பேர் வங்கிகளில் பினாமி பெயரில் 29 கணக்குகளை தொடங்கி, அவற்றின் மூலமாக சுமார் 3500 ம்கோடி ரூபாய் பணத்தை கள்ளத்தனமாக இடம்மாற்றியதாக கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடித்தது.
இதன் அடிப்படையில், இவர்கள் மீது வங்கியியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருவதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ஆஜர்படுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று தெரிவித்துள்ளார்.
எனினும், அப்படி ஏதும் கைது உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என பாகிஸ்தான் மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் மறுத்துள்ளார். #Pakistancourt #Zardariarrestwarrant #moneylaunderingcase