மீன்களை பதப்படுத்த பார்மலின்? - மீன் மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

மீன்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மலின் எனும் வேதிப்பொருள் தூவப்படுவதாக புகார் எழுந்த நிலையில், சென்னை மீன் மார்கெட்டுகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

தற்போது கேரளாவில் கடலில் மீன்பிடிக்க தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாடு, கோவா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மீன்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களில் பிரேதத்தை பதப்படுத்தி வைக்க உதவும் ‘பார்மலின்’ என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அபாயம் கொண்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் மீன்களை தங்களது மாநிலத்தில் விற்பனை செய்வதற்கு கேரள அரசு தடை விதித்தது. மேலும் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான அமரவிளை சோதனைச் சாவடி, நெல்லை மாவட்டம் வழியாகச் செல்லும் ஆரியங்காவு சோதனைச் சாவடி ஆகியவற்றில் 50 ஆயிரம் கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் இதுவரை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்ற ஆய்வை சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் விற்பனை சந்தை ஆகியவற்றில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்டனர். இங்கிருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அதிக அளவில் மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, பழவேற்காடு, நீலாங்கரை உள்பட பல்வேறு முக்கிய மீன் மார்க்கெட்டுகளிலும் மீன்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு இருப்பது மீன் உணவு சாப்பிடுவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com