கறம்பக்குடி குளந்திரான்பட்டு குளத்தில் அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு பகுதியில் உள்ள வெட்டுக்குளத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு பகுதியில் உள்ள வெட்டுக்குளத்தில் சுமார் 10 ஏக்கருக்குமேல் பரப்பளவில் நிலம் காணாமல் போய் விட்டதாக கூறி, அப்பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு துண்டு பிரச்சுர போஸ்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. குளத்தை மீட்க துணிச்சலான அதிகாரிகள் தேவை என கூறி வெளியிட்டிருந்தனர். இந்தத் துண்டுப்பிரசுரம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட ஆக்கிரமிப்பு குளத்தை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுத பாணி, கறம்பகுடி தாசில்தார் வில்லியம் மோசஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் நலதேவன், கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லாமேரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குளத்தை ஆக்கிரமித்து நடவு மற்றும் பயிர்கள் செய்திருந்த விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். பின்னர் விவசாயிகளிடமிருந்து ஆவணங்கள் இருந்தால் தாக்கல் செய்யும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பின்னர் அரசு நில அளவையர்களால் ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணி தொடங்கியது. இதற்கிடையே அப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் விவசாயம் செய்து வருவதாகவும், அப்பகுதி விவசாயிகள் அதிகாரி முன்னிலையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com