

சென்னை:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மல்லிக் புல்லு. சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 1995-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது, தாய் இறந்துவிட்டார்.
இதன்பிறகு எந்த ஒரு ஆதரவும் இல்லாத நிலையில் ராஜ்குமார் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவரை கண்டு பிடிக்கவில்லை.
இந்த நிலையில், வட மாநிலங்களில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் யாராவது காணாமல் சென்றுள்ளனரா? என மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாகிரா ஒவ்வொரு காப்பகத்திலும் ஆய்வு செய்தார். பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் ராஜ்குமார் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து ஆய்வாளர் தாகிரா ஒடிசாவில் உள்ள சோரா காவல் நிலையத்திற்கு போன் செய்து விசாரித்தார். இதில் ராஜ்குமார் மல்லிக்கின் உறவினர்களிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் செய்து பேசும்போது ராஜ்குமார் மல்லிக் மனநலம் பாதிக்கப்பட்டு தொலைந்து விட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது உறவினர்களை சென்னைக்கு வரவழைத்து ராஜ்குமார் மல்லிக்கை போலீசார் ஒப்படைத்தனர். உறவினர்களை கண்ட ராஜ்குமார் மகிழ்ச்சியில் உருக்கமுடன் நன்றி தெரிவித்தார். இவர்களின் போக்குவரத்து செலவையும் குற்ற ஆவண காப்பகம் போலீசார் ஏற்றுக்கொண்டனர்.