வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கும்பகோணத்தில் வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. #GoondasAct
வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

தஞ்சாவூர்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி வங்கி பயிற்சி பணிக்காக மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையம் வந்தார்.

அப்போது ரெயில் நிலையம் அருகே வந்த ஒரு ஆட்டோவில் இளம்பெண் ஏறி, தான் செல்ல வேண்டிய ஓட்டலில் இறங்கி விடுமாறு கூறினார்.

ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண் சொன்ன முகவரிக்கு செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டி சென்றார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டதால் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

நள்ளிரவில் தனியாக ரோட்டில் நடந்து சென்ற அந்த இளம்பெண்ணை 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அந்த பெண் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த் (21), மூப்பனார் நகரை சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன் (19), ஹலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (19) ஆகிய 4 பேர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்த், தினேஷ்குமார், அன்பரசன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 4 வாலிபர்களிடம் அதன் நகலை போலீசார் வழங்கினர். #GoondasAct

X

Maalai Malar
www.maalaimalar.com