

மகாராஷ்டிராவில் ஜே ஜே மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகள் குட்டைப் பாவாடை அணிந்து கல்லூரிக்கு வருவதற்கும், மாணவர்களுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாணவிகள் குட்டைப் பாவாடை அணிந்து, முகங்களை துப்பட்டாவினால் மூடிக் கொண்டு, நேற்று கல்லூரி முன்பு ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், 'கடந்த மார்ச் 21 அன்று நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில், சில மாணவிகள் கல்லூரியின் விதிகளை மீறி நடந்ததற்கு அனைத்து மாணவிகளும் தண்டிக்கப்பட வேண்டுமா? எங்கள் ஆடைகளை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
மேலும் விடுதிக்கு 10 மணிக்குள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது எங்கள் தனிப்பட்ட சுதந்திரம், உரிமைகளை பறிக்கும் செயலாக உள்ளது. இந்த உத்தரவினை கல்லூரி முதல்வர் அஜய் சந்தன்வாலே மற்றும் பெண்கள் விடுதியின் வார்டன் ஷில்பா பாட்டீல் அறிவித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த தடையை திரும்ப பெற வேண்டி, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளோம்' என கூறினர்.