

பாட்னா:
பீகார் மாநிலத்தில் மெகா கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இவர் கடந்த மாதம் மெகா கூட்டணியை விட்டு விலகினார். சில மணி நேரங்களில் பா.ஜ.க.வுடன்
கூட்டணி அமைத்து மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். அவரது முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ் குமார் வீட்டில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் சேரலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, வேறு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த சரத் யாதவுடன் வந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் வீட்டின் முன்னால் வாகனத்தை நிறுத்தினர். அவர்கள் தங்கள் கைகளில் கம்புகள் மற்றும் பெல்டுகளை வைத்திருந்தனர். அவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, அங்கு வந்த நிதிஷ் குமார் மற்றும் சரத் யாதவ் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.