

புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
கடந்த மூன்று கட்ட அறிவிப்புகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயம் உள்பட பல்வேறு துறைகளுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் தன்னிறைவு இந்தியா பொருளாதார சிறப்பு திட்டங்களின் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
உணவு பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.
புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களைத் தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.
இதன்மூலம் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.