

நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் முத்து வளவன், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முத்து வளவன் கூறும்போது, மூலக்கரைப்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அங்கு சிலர் வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த குடியிருப்புகளுக்கு பின்புறம் சிலர் ரியல் எஸ்டேட் மூலம் நிலத்தை விற்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்காக, அவர்கள் அரசு கொடுத்த நிலத்தில் பொதுப்பாதை அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். அங்கு ஒரு வீட்டை காலி செய்யுமாறு வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த வீட்டை காலி செய்தால் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசு கொடுத்த இடத்தில் பொதுப்பாதை அமைப்பதற்கான சாத்தியமில்லை. இது சம்பந்தமாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலருக்கு வருவாய் துறை அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் ஏற்கனவே அரசு சார்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு வருமாறும், அந்த ஆவணங்களின் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.