

நெகமம்:
நெகமத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளதாலும், அந்த குறுகலான சாலையில் 2 புறமுள்ள கடையின் அருகில் 2 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளை நிறுத்தி விடுகின்றனர். இதனால் அந்த வழியாக வந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பஸ் போக்குவரத்து வந்து செல்லவும் சிரமமாக உள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து நெகமம் வழியாக தாராபுரம் செல்லவும், தாராபுரத்தில் இருந்து நெகமம் வழியாக பொள்ளாச்சிக்கும் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நெகமத்தில் இருந்து சின்ன நெகமம், உதவிபாளையம், வீதம் பட்டி, வீ.வேலூர், ராமச்சந்திராபுரம், பெரியபட்டி வழியாக தாராபுரம் சென்றடைகிறது.
இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் நெகமத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் அங்குள்ள கடையின் அருகிலேயே நின்று காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே இந்த சாலையில் பஸ் வந்து நின்றாலோ அடுத்த வாகனம் செல்ல அதிகளவில் இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நெகமம் தாராபுரம் சாலையை அகலப்படுத்தி, பஸ் பயணிகள் காத்திருக்க அதிக இடம் ஒதுக்கி தந்து போக்குவரத்திற்கு இடையூறு இன்றி இரண்டு சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டி நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினார்கள்.