search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதையும் நகரமான ஜோஷிமத்தை தொடர்ந்து உத்தரகாண்டில் மேலும் 5 இடங்களில் வீடுகளில் விரிசல்
    X

    புதையும் நகரமான ஜோஷிமத்தை தொடர்ந்து உத்தரகாண்டில் மேலும் 5 இடங்களில் வீடுகளில் விரிசல்

    • ஜோஷிமத் நகரத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • ரிஷிகேஷ்-கர்ணபிராயங்க் ரெயில்வே சுரங்க பாதை திட்டம் முக்கிய காரணமாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

    அந்த நகரம் சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருகிறது. அங்குள்ள 678 வீடுகள் வசிக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு மாநில அரசு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 82 குடும்பங்கள் இடமாற்றப் பட்டுள்ளன.

    இந்நிலையில், ஜோஷிமத் நகரத்தை போலவே மேலும் 5 இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தெஹ்ரி மாவட்டத்தில் நரேந்திர நகர் தொகுதியில் உள்ள பகுகுணா நகரில் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கு ரிஷிகேஷ்-கர்ணபிராயங்க் ரெயில்வே சுரங்க பாதை திட்டம் முக்கிய காரணமாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த திட்டத்தால் அப்பகுதியில் உள்ள அடாலி, குலர், வியாசி, கவுடியாலா மற்றும் மலேத்தா ஆகிய கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஹரிஸ்சிங் கூறுகையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் சுரங்கபாதையில் வீடுகள் குலுங்குகிறது. இதனால் இரவு நேரங்களில் வீடுகளில் உறங்க முடியாமல் குழந்தைகளுடன் வெளியே வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார்.

    இதுகுறித்து முதல்-மந்திரி புஸ்கர்சிங் தாமி அரசிடம் உள்ளூர் நகராட்சி உதவி கேட்டுள்ளது. இந்நகரில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு பிற இடங்களுக்கு வெளியேற தொடங்கியுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று அந்த நகர மக்களுடன் உரையாடினர். அப்போது தங்களுக்கு மறுவாழ்வு அளிக்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதேபோல ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரெயில் பாதையில் சுரங்கபாதை அமைக்கும் பணி காரணமாக ஸ்ரீநகரில் ஹெடல்மொஹல்லா மற்றும் நர்சரி ரோடு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

    மேலும் பாகேஷ்வரின் கப்கோட் பகுதியில் உள்ள கர்பகத் கிராமத்திலும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். அந்த கிராமத்திற்கு மேலே நீர்மின் திட்ட சுரங்கபாதைக்கு மேலே உள்ள மலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பல இடங்களில் நீர்கசிவு ஏற்படுகிறது.

    இது அந்த கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சுரங்கபாதையில் இருந்து நீர் கசிவு ஏற்படும் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பள்ளங்கள் உருவாக தொடங்கி இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

    உத்தரகாசியில் உள்ள மஸ்தடி மற்றும் பட்வாடி ஆகிய கிராமங்களும் ஆபத்தான இடங்களாக மாறி வருவதாக கூறப்படுகிறது. மஸ்தடி கிராமம் ஏற்கனவே 1991-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்த கிராமம் மாவட்ட தலைநகரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    இதேபோல ருத்ரபிரயாக் நகரத்தில் உள்ள மரோடா கிராமத்திலும் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வசிக்கும் மக்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×