ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது மும்பை உயர்நீதிமன்றம்

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்யன் கான்
ஆர்யன் கான்
Published on

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 3-வது முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆர்யன் கான் சார்பில் மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். என்.சி.பி.க்காக ஏ.எஸ்.ஜி. அனில் சிங் வாதாடினார்.

இருதரப்பில் இருந்தும் தங்களது வலுவான கருத்துக்களை முன்வைத்தனர். இந்த நிலையில் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com