

மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சிதம்பரசாமி. இவரது மனைவி கவிதா(வயது36). கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரசாமி இறந்து விட்டார். இதையடுத்து கவிதா தனது மகள் செல்வ நந்தினி(17) மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.
கணவர் இறந்தது முதல் கவிதா மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கவிதா சம்பவத்தன்று தனது தாயிடம் குளிக்க செல்வதாக கூறி விட்டு மாடிக்கு சென்றார். பின்னர் அங்கு மோட்டார் சைக்கிளுக்காக வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் அவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மூலனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.