ஆன்லைனில் திருமணத்துக்கு பதிவு செய்தவரிடம் பெண் குரலில் பேசி பணம் மோசடி - வாலிபர் கைது

ஆன்லைனில் திருமணத்துக்கு பதிவு செய்தவரிடம் பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபரை கைது செய்தனர்.
ஆன்லைனில் திருமணத்துக்கு பதிவு செய்தவரிடம் பெண் குரலில் பேசி பணம் மோசடி - வாலிபர் கைது
Published on

போரூர்:

பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(42). தனியார் நிறுவன ஊழியர்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது திருமணத்திற்கு பெண் வரன் வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்து இருந்தார். சிலநாட்களில் ஆனந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர் தங்களின் முழு விபரங்களையும் ஆன்லைனில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்து விட்டது. தங்களை திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன் என்று தெரிவித்தார்.

இதில் மயங்கிய ஆனந்த் அடிக்கடி செல்போன் மூலம் அந்த பெண்ணிடம் பேசி வந்தார். அப்போது ஒரு நாள் ஆனந்தை தொடர்பு கொண்ட பெண் தனது சித்தியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று கேட்டார்.

உடனடியாக ஆனந்த் ரூ.45 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் சில தினங்களில் மீண்டும் தொடர்பு கொண்ட பெண் மருந்து வாங்க பணம் வேண்டும் என்று கேட்டவுடன் ரூ.12ஆயிரத்தை அதே வங்கி கணக்கில் செலுத்தினார் ஆனந்த். பின்னர் அந்த பெண் தீடீரென தலைமறைவானார். ஆனந்த்திற்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது.

இந்த நிலையில் ஒன்றரை வருட இடைவெளிக்கு பின் நேற்று முன்தினம் மீண்டும் ஆனந்த்தை தொடர்பு கொண்ட அந்த பெண் ஆசை வார்த்தை கூறி பேசினார். தனக்கு குளிர்சாதனப் பெட்டி வேண்டும் என்று கேட்டார். வாங்கி தருவதாக கூறிய ஆனந்த் வடபழனி அருகே வருமாறு பெண்ணை அழைத்தார்.

தன்னிடம் பணம் பறித்த பெண்ணை பிடிக்க ஆனந்த் காத்திருந்தார். ஆனால் அங்கு வாலிபர் ஒருவர் மட்டும் வந்தார். சந்தேகமடைந்த ஆனந்த் அவரை மடக்கி பிடித்தார். தன்னிடம் பெண் குரலில் பேசி பணம் பறித்தது வாலிபர் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வாலிபரை வட பழனி போலிசில் ஒப்படைத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி விசாரணை நடத்தியதில் பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டது பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்(39) என்பது தெரியவந்தது. வேறு யாரிடமும் இதேபோல் பேசி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com