

சென்னை:
டெல்லி வடகிழக்குப் பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து 3-வது நாளாக நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 150 போலீசார் வரை காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் மன்தீப் ராந்தவா நிருபர்களிடம் கூறுகையில்,
வடகிழக்கு டெல்லியில் நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டபோதிலும் வடகிழக்கு மாவட்டத்தில் வன்முறை கட்டுக்குள் வந்துள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 11 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த தேவையான அளவுக்கு போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையினால் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. டெல்லி கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.