

கரூர்:
கரூர் காந்தி கிராமத்தில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவ மனை அமைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரூ. 229.46 கோடி நிதி ஒதுக்கினார். தற்போது திட்டமதிப்பீடு ரூ. 269.58 கோடியாக உயர்ந்துள்ளது. உயர்ந்த ரூ. 40 கோடி நிதியினை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் ஒதுக்கியுள்ளனர். பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. 11 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது.
2018-19 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தேசித்து பணிகள் நடந்து வருகிறது. திட்டமதிப்பீடு உயர்ந்துள்ளதால் நவீன முறையில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. கட்டிடங்களின் உயரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 800 படுக்கை வசதியுடன் மருத்துவகல்லூரி கட்டப்படுகிறது. எம்.சி.ஏ. அதிகாரிகள் பார்த்துவிட்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிப்பார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பேட்டியின்போது கலெக்டர் அன்பழகன், கீதா எம்.எல்.ஏ., நகர செயலாளர் நெடுஞ்செழியன், மீனவரணி செயலாளர் சுதாகர், முன்னாள் மாணவரணி செயலாளர் தானேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.