

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் - நாங்ஸ்டோய்ன் - ராங்ஜியங் - துரா சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஷில்லாங் நகரில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்ட மோடி சாலையை திறந்த பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மாநிலத்தின் ஷில்லாங் மற்றும் துரா நகர்களை இந்த சாலை இணைக்கிறது. இதன் மூலம் பயண நேரத்தை வெகுவாக குறைக்கலாம். போக்குவரத்து மூலம் மாற்றத்தை கொண்டு வருவதே நமது நோக்கமாகும்.
கடந்த 2014 ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய பின்னர், எங்கள் மந்திரிகளுக்கு தெளிவான அறிவுரை வழங்கப்பட்டது. அதாவது மந்திரிகளில் யாராவது ஒருவர் 15 நாட்களுக்கு ஒருமுறை வட-கிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். செல்வது என்றால் காலையில் சென்று விட்டு மாலை டெல்லி திரும்புவது அல்ல. எங்கள் மந்திரிகள் அங்கேயே தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
சென்ற ஆண்டு மேகாலயாவில் வட-கிழக்கு கவுன்சில் கூட்டத்தை தொடங்கி வைத்தேன். மேகாலாயாவில் சுற்றுலா மேம்பாட்டுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக உருவாக்க வேண்டும். வட-கிழக்கு பிராந்தியத்தில் 47 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 15 புதிய ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.