

வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், ஜீவசமாதி அடைய தனக்கு அனுமதி கேட்டு தமிழக முதல்-அமைச்சர், சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மனு அளித்தார்.
வேலூர் ஜெயிலில் கடந்த 18-ந்தேதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை சிறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
சிறையில் அவருக்கு அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் முருகனின் உறவினர் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில் சிறை கைதிகளின் உயிரைக்காப்பாற்ற வேண்டிய கடமை சிறைத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே, முருகனை சந்திக்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும்.
முருகனின் உயிரை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து, முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வேலூர் ஜெயிலில் முருகன் இன்று 12வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசு டாக்டர் அப்சல் அலி தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று ஜெயிலுக்கு சென்று முருகனின் உடல் நிலை குறித்து பரிசோதித்தனர்.
அப்போது ஜெயிலுக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டது. இன்று முருகன் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.