

திருப்பூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் 3-வது அலை ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருப்பூரில் கட்டுப்பாட்டு விதிமுறை களை பொதுமக்கள்-வியாபாரிகள் கடைபிடிக் கின்றனரா? என போலீசார் மற்றும் சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று விடுமுறை என்பதால் வெளியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவற்றில் அதிகாலை முதலே அதிக அளவிலான பொதுமக்கள் திரண்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி 6 அடி இடைவெளியில் கட்டங்கள் வரைந்து கொரோனா வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
கூட்டமாக திரண்டு வருபவர்கள், முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு சுகாதார துறையினர் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் முககவசம் அணியாமல் மார்க்கெட்டுக்கு வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.