வாணியம்பாடி அருகே தீபாவளி விற்பனைக்காக போலி மது தயாரிக்க முயன்றவர் கைது

வாணியம்பாடி அருகே தீபாவளி விற்பனைக்காக போலி மது தயாரிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான தங்கராஜ்- மூல பொருட்களை படத்தில் காணலாம்.
கைதான தங்கராஜ்- மூல பொருட்களை படத்தில் காணலாம்.
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் சிலர் போலி மதுபானங்களை தயாரிப்பதாக கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவேல், வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்ட போலீசார் மேல்நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது பெருமாள்வட்டம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 43) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தங்கராஜ் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு தங்கராஜ் மற்றும் பெங்களூருவை சேர்ந்த அவரது நண்பரான ஜெகன் (45) ஆகிய 2 பேரும் வீட்டிற்குள் போலி மதுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பியோட முயன்றனர். இதில் தங்கராஜை போலீசார் மடக்கி பிடித்தனர். ஜெகன் தப்பியோடிவிட்டார்.

2 பேரும் சேர்ந்து தீபாவளி விடுமுறையில் போலி மதுபானங்களை விற்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக கோவாவில் இருந்து ஸ்டிக்கர், ஆல்கஹால் மற்றும் எந்திரம் போன்றவற்றை வாங்கி வீட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தங்கராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் போலி மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மூல பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ஜெகனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com