

வாஷிங்டன்:
இந்தியா - அமெரிக்கா நட்புறவு மாநாட்டின் இரண்டாவது உச்சி மாநாடு வாஷிங்டன்னில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
சிறு வயதில் தாம் தொப்பி அணிந்திருந்ததை பார்த்து, நீ என்ன மகாத்மா காந்தியா என பள்ளியில் எனது ஆசிரியை கேட்டார். அதன் பின்னர் தான் மகாத்மா காந்தி குறித்து தெரிந்து கொள்ள, பல புத்தகங்களை தேடித்தேடி படித்தேன். காந்திய தத்துவம் மற்றும் சிந்தனை மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.
அமெரிக்காவின் அகிம்சை இயக்கத்தின் ஆன்மீகத் தலைவராக மகாத்மா காந்தி இருந்தார். மேலும் அமெரிக்க சமூக ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தி எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறித்தும் நான்சி விவரித்தார்.
சத்தியாக்கிரகத்தின் நோக்கம் அகிம்சை மற்றும் சத்தியத்தை வலியுறுத்துவது, இதைத்தான் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் செய்தார். உண்மைகளை வன்முறை வழியில்லாமல் எவ்வாறு உணர்த்துவது என்பதை காந்தி இவ்வுலகிற்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
இந்தியா - அமெரிக்க உறவு மேலும் பலமாவதன் மூலமாக, ஒட்டுமொத்த உலகத்தையே கைதூக்கி விட முடியும். இதற்காக இரு நாடுகளும் எப்போதும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.