ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சலே தேர்வு

ஈராக் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அதிபராக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர். #BarhamSalih
ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சலே தேர்வு
Published on

பாக்தாத்:

ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அங்கு திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். 

அதைத் தொடர்ந்து ஈராக்கில் ஜூலை 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே, வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.

ஈராக் அதிபர் தேர்தலில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஈராக் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #BarhamSalih

X

Maalai Malar
www.maalaimalar.com