கொடுங்கையூர் அருகே குடும்பத்தகராறில் வாலிபர் கொலை

கொடுங்கையூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கொடுங்கையூர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

ராயபுரம்:

கொடுங்கையூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்த சுகுமார் என்பவருடைய மகள் தாரணி (24). இவருக்கும் சந்துரு என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக தாரணியும், சந்துருவும் பிரிந்துவிட்டனர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் (26) என்பவரை தாரணி 2-வது திருமணம் செய்துகொண்டார்.

இதனால் இரண்டு குடும்பத்தினர் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சந்துரு தனது தம்பி தயாளனுடன் நேற்று தாரணி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

அப்போது தாரணி, அவரது தந்தை சுகுமார், 2-வது கணவர் தனுஷ் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாரணி, சுகுமார், தனுஷ் உள்பட சிலர் சேர்ந்து சந்துரு, தயாளன் இருவரையும் தாக்கினார்கள். கத்திக் குத்தும் விழுந்தது.

இதில் தயாளன் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தனுஷ் மற்றும் கொலைக்கு காரணமானவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்திரா நகர் சுகுமார் (38), சுரேஷ் (26), திரு.வி.க.நகரை சேர்ந்த திருமலை (37), வினோத் (28), சுரேஷ் (30) ஆகிய 5 பேர் கொடுங்கையூர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

காசிமேடு சிங்காரவேலன் குடியிருப்பை சேர்ந்தவர் திவாகரன் (28) ரவுடி. இவர் மீது கொலை வழக்கு உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் கொலை செய்யப்பட்டார். காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து காசிமேட்டை சேர்ந்த வேல் முருகன்(20), ஸ்டீபன் (20), லோகேஷ் (20), சரத்குமார் (21), விமல் (20), அந்தோணி (19) ஆகியோர் காசிமேடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com