காட்பாடியில் அம்மன் கோவிலில் 150 கிலோ ஐம்பொன் சிலை கொள்ளை

காட்பாடியில் உள்ள அம்மன் கோவிலில் புகுந்து 150 கிலோ ஐம்பொன் சாமி சிலையை கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
காட்பாடியில் ஐம்பொன் சிலை கொள்ளை நடந்த மாரியம்மன் கோவில்.
காட்பாடியில் ஐம்பொன் சிலை கொள்ளை நடந்த மாரியம்மன் கோவில்.
Published on

வேலூர்:

காட்பாடி வள்ளிமலை சாலையில் வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு முன்பு 150 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை செய்து வைத்தனர்.

கோவிலை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதி மக்கள் கோவிலில் விழா நடத்தி வருகின்றனர். தினமும் பூஜைகள் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்வதற்காக கோவில் திறந்தே இருக்கும். இரவு நேரங்களிலும் பூட்டுவதில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த 150 கிலோ ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி சிலை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. கொள்ளைபோன சிலையின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காட்பாடியில் வெளியூர் கும்பல் தங்கிருந்து கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குட்டையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்து ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி 28 பவுன் நகையை பறித்து சென்றனர்.

கொள்ளை கும்பல் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com