

ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்திருந்த போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.
இங்கு மீன் பிடிக்க கூடாது உடனே புறப்பட்டு செல்லுங்கள் என மீனவர்களை பார்த்து இலங்கை கடற்படையினர் எச்சரித்தனர். உடனடியாக மீனவர்கள் வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள்.
அப்போது குட்டி ரோந்து கப்பல்களில் மீனவர்களின் விசைப்படகுகளுக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். சில மீனவர்கள் மீது தாக்குதலும் நடந்தது.
இதனால் அச்சத்திற்குள்ளான மீனவர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், மீன்களை பிடிக்காமல் நள்ளிரவிலேயே கரை திரும்பினர்.
மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் விரட்டியடிப்பு ராமேசுவரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.