கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து சாலை மறியல்

பட்டுக்கோட்டை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து சாலை மறியல்
Published on

பட்டுக்கோட்டை:

டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 28 நாட்களாகியும் இன்னும் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.

தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால் மூலம் தாமரங்கோட்டை தெற்கு, வடக்கு, பரக்கலக்கோட்டை, தம்பிக்கோட்டை மறவக்காடு, வடகாடு உள்ளிட்ட 5 கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேற்கண்ட 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாமரங்கோட்டையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தண்ணீர்விடக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த ஆர்.டி.ஓ. மகாலெட்சுமி, டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 25-ம் தேதிக்குள் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை மெயின் ரோட்டில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com