

ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளையும், மக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், பூஞ்ச் மாவட்ட எல்லையோர கிராமங்களில் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. வீடு போன்ற அமைப்புடன் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டிருப்பதால், இது சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தால்கூட தாக்குப்பிடிக்கும்.
பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவதாகவும், பதுங்கு குழிகள் பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகவும் கோசலியான் கிராமத்தைச் சேர்ந்த அஸ்லாம் என்பவர் கூறினார்.