

அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட கோட்டாட்சியர் முருகானந் தம், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கணேசன், வாடிப்பட்டி தாசில்தார் கிருஷ்ணகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ், கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ்குமார் மற்றும் பேரூராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தையும், மாடுகள் அவிழ்த்துவிடப்படும் வாடிவாசல் இடத்தையும், வீரர்கள் காளைகள் பதிவு செய்து பரிசோதனை செய்யப்படும் இடத்தையும், மாடுகள் வெளியேறிச் சென்று ஒன்று சேரும் இடத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் கோட்டாட்சியர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு விழா 2 ஊரிலும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். 700 காளைகள் அனுமதிக்கப்படும். மாடுபிடி வீரர்கள் சீருடை அணிந்தபடி களத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு 80 நபர் வீதம் மைதானத்திற்குள் அனுப்பப்படும் சுமார் 650 மாடுபிடி வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். 2 ஊரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
பேரூராட்சி அலுவலர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் 2 மைதானத்தையும் சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது அலங்காநல்லூரில் விழா கமிட்டி குழுவினரும், பாலமேட்டில் கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.