திட்டமிட்டபடி 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

ஏற்கனவே திட்டமிட்டபடி 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு
Published on

சென்னை:

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரவேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி, தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தினை அமல்படுத்தவேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் உடனடியாக அறிவிக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தினை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் (ஜியோ) சார்பில் சென்னையில் கடந்த 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 22-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது, செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும், அதற்கான ஆயத்த மாநாடுகளை மாவட்ட தலைநகரங்களில் நடத்த இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி கடந்த 26 மற்றும் 27-ந் தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் ஆயத்த மாநாடுகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் தலைமை தாங்கினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* ஏற்கனவே திட்டமிட்டபடி 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது.

* 7-ந் தேதி வட்ட அளவில் மறியலில் ஈடுபடுவது.

* 8-ந் தேதி மாவட்ட அளவில் மறியலில் ஈடுபடுவது.

* 10-ந் தேதி உயர்மட்ட குழு கூட்டம் கூடி 11-ந் தேதி முதல் போராட்டத்தை எந்த வகையில் முன்னெடுத்து சென்று தீவிரப்படுத்துவது என முடிவு எடுப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com