எம்.எல்.ஏ.க்களுக்கு பணப்பட்டுவாடா - செய்யாத்துரை மகன்கள் 4 பேரிடம் விடிய விடிய விசாரணை

ஒப்பந்த பணிகளை பெற எம்.எல்.ஏ.க்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து செய்யாத்துரை மகன்கள் 4 பேரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. #ITRaid #SPK
எம்.எல்.ஏ.க்களுக்கு பணப்பட்டுவாடா - செய்யாத்துரை மகன்கள் 4 பேரிடம் விடிய விடிய விசாரணை
Published on

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 65). தொடக்கத்தில் ஆட்டுத்தரகு பார்த்து வந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முதல்நிலை ஒப்பந்ததாரராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இவரது எஸ்.பி.கே. நிறுவனம் தமிழகம் முழுவதும் முக்கிய சாலைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சோதனையின்போது 185 கோடி ரொக்கப்பணம், 105 கிலோ தங்க கட்டிகள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் வருமான வரித்துறை வசம் சிக்கின.

5-வது நாளான இன்றும் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. செய்யாத்துரையின் மகன்களான நாகராஜ், பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன், கருப்பசாமி ஆகியோரது வீடுகளிலும் ஏராளமான நகை, பணம் சிக்கியதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை வளையத்தை அதிகரித்துள்ளனர்.

நேற்று மாலை நாகராஜனை சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை அழைத்து வந்தனர். அதன் பின்னர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சாலை ஒப்பந்தப்பணிகள் தொடர்பாகவும் இதற்காக யார் யாருக்கு எவ்வளவு தொகை கைமாறியது? என்பது குறித்தும் கேள்விகள் கேட்டு விசாரித்தனர்.

விடிய, விடிய நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளன.

மேலும் இந்த சோதனையின் போது ரகசிய சி.டி. ஒன்றும் சிக்கியுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை தகவல் வெளியிடவில்லை என்றாலும் இந்த சி.டி. குறித்து ரகசியமாக பல கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

இந்த சி.டி.யில் செய்யாத்துரையுடன் தொடர்புடைய அரசியல் புள்ளிகள் பலரது குரல்கள் பதிவாகி உள்ளன. 40-க்கும் மேற்பட்டோரின் உரையாடல்கள் இந்த சி.டி.யில் இடம் பெற்றுள்ளன. அவர் கள் பேசிய உரையாடல்கள் அனைத்தும் பணப்பரிமாற்றம் தொடர்பாக இருந்ததாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதல்-அமைச்சராக தேர்வு செய்வதற்காக கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டபோது எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

எம்.எல்.ஏ.க்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக செய்யாத்துரையிடம் முக்கிய பிரமுகர்கள் பேசியது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த ரகசிய சி.டி.யில் இடம் பெற்றுள்ளதால் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையின் முழு விவரங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து டெல்லியில் இருந்து இன்று அதிகாரிகள் அருப்புக்கோட்டைக்கு வந்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செய்யாத்துரையின் நிறுவனங்களில் ஆடிட்டராக பணி புரிந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட மேலும் சிலரி டமும் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

செய்யாத்துரையிடம் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கையை வருமான வரித்துறை இணை ஆணையர் ஜெயராகவன் தலைமையில் 8 பேர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com