இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான ஊழல் வழக்கு - மார்ச் 17ல் விசாரணை தொடக்கம்

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் பற்றிய விசாரணை மார்ச் மாதம் 17-ம் தேதி தொடங்கும் என அந்நாட்டு நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெஞ்சமின் நேதன்யாகு
பெஞ்சமின் நேதன்யாகு
Published on

ஜெருசலேம்:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது லஞ்சம் பெறுதல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி என எண்ணற்ற வழக்குகள் உள்ளன.  இவற்றில் கோடீசுவர நண்பர்களிடம் இருந்து விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை பெற்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  ஊடகங்களில் வரும் செய்திகள் தனக்கு சாதகம் ஆக இருக்கும் வகையில் பணம் கொடுத்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இஸ்ரேலில் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட முதல் பிரதமர் நேதன்யாகு. அந்த நாட்டின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்தவர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், எந்த தவறும் செய்யவில்லை என அவர் கூறி வருகிறார்.

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் வரும் மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. ஒரு வருடத்திற்குள் நடைபெறும் 3-வது தேர்தல் இதுவாகும்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான வழக்குகள் பற்றிய விசாரணை தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு நீதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், பொதுத் தேர்தல் நடந்தபின் 2 வாரங்கள் கழித்து (அதாவது மார்ச் 17ம் தேதி) ஜெருசலேம் நகரில் வழக்குகள் பற்றிய குற்றச்சாட்டு பத்திரம் நேதன்யாகு முன்னிலையில் வாசிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com