ஈராக் பாலைவன பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 22 இலக்குகள் அழிப்பு

ஈராக் பாலைவனப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய 20-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து நேற்று முன்தினம் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. இதில் 22 இலக்குகள் அழிக்கப்பட்டன.
ஈராக் பாலைவன பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 22 இலக்குகள் அழிப்பு
Published on

பாக்தாத்:

ஈராக் நாட்டில் அல் ஜசிரா பாலைவனப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களது 20-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து நேற்று முன்தினம் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின.

இதில் 22 இலக்குகள் அழிக்கப்பட்டன. அவர்களின் வாகனங்களும் நாசமாக்கப்பட்டன. ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “ராணுவ அளவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். பாலைவன பகுதிகளில் இருந்தும் அவர்களை வெளியேற்றி விட்டால், இறுதி வெற்றியை அறிவித்து விடலாம்” என்று கூறினார்.

இதற்கிடையே திக்ரித் நகருக்கு வடக்கில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடிக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் நேற்று முன்தினம் ஊடுருவ முற்பட்டனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இதுபற்றி ஈராக் ராணுவ ஊடகத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திக்ரித்தில் ஜசீரத் அல் சினியா பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் ஊடுருவ முயன்றனர். அவர்களை 99-வது படைப்பிரிவினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதன் முடிவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com