

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அதனை மீட்பதற்காக, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அவர்களுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் தரப்பிலும் அதிக அளவிலான உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த சண்டை காரணமாக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மொசூல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈராக் அரசு முகாம்கள் அமைத்து தங்கவைத்துள்ளது.
மொசூல் நகரின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ள ஈராக் ராணுவம், தற்போது மேலும் முன்னேறியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் முதல் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் கடுமையாக்கப்பட்டதாக ஈராக் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.