உக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் - ஈரான்

ஈரான் ராணுவத்தினால் தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம் டோர்-எம் 1 என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டது என ஈரான் சிவில் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.
டோர்  எம் 1 ஏவுகணை (கோப்புப் படம்)
டோர் எம் 1 ஏவுகணை (கோப்புப் படம்)
Published on

மாஸ்கோ:

ஈரான் அமெரிக்க இடையேயான பிரச்சினைகள் குறித்து அனைவரும் அறிந்ததே. ஈரானின் முக்கிய தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அமெரிக்கா போர் விமானம் என நினைத்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது.

82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டினர் உள்பட 176 பேர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இது உலக அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை விபத்து என முதலில் கூறிய ஈரான் அரசு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக, விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டது.

இந்த சம்பவம் குறித்து ஈரான் பதிலளிக்க வேண்டும், அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஈரான் அதிபருக்கு எதிராகவும் அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றது.  

அதன் பின்னர், உக்ரைன் விமான விபத்தில் தொடர்புடையர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.

இந்நிலையில், தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம்  டோர்-எம் 1 என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டது என ஈரான் சிவில் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டாவதாக வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கையில், ‘ஜனவரி 8 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 06:12 மணிக்கு (02:42 GMT) தெஹ்ரானின் இமாம் காமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர், உக்ரைன் விமானம் சுமார் 8,100 அடியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் இழந்தது. வடக்கிலிருந்து, போயிங் 737-800 விமானத்தின் மீது இரண்டு டோர்-எம் 1 (தரை முதல் வான்வழி) ஏவுகணைகள் வீசப்பட்டன’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com