

ஐ.பி.எல். தொடரின்போது சூதாட்ட தரகர்கள் கிரிக்கெட் வீரர்களை நாடிவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ ஊழல் தடுப்புக் குழுவை ஏற்படுத்தி சூதாட்ட தரகர்களை கண்காணித்து வருகிறது.
அதன்படி கான்பூர் போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். அவர்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேரை காசியாபாத் போலீசார் நேற்றிரவு அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சில செல்போன்கள், 70 லட்சம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் கான்பூரில் நடைபெற்ற குஜராத் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
கான்பூரில் கைது செய்யப்பட்டவரில் ஒருவரான ரமேஷ் குமார் என்பவர் கிரிக்கெட் மைதானத்தின் விளம்பர பேனர்கள் வைக்கும் துணை ஒப்பந்தக்காரராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் போன்றவற்றை ஓட்டலில் உள்ள மற்றவர்களுக்கு வழங்கியுள்ளார். இதனடிப்படையில் சூதாட்டம் நடைபெற்றுள்ளது.
இதை கண்டறிந்த கான்பூர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 41 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்தனர்.