ஐ.ஓ.பி. வங்கியில் கொள்ளை - ரூ.40 லட்சம் நகைகளை இழந்த வாடிக்கையாளர்கள்

சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி. வங்கி லாக்கரில் கொள்ளையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர்.
ஐ.ஓ.பி. வங்கியில் கொள்ளை - ரூ.40 லட்சம் நகைகளை இழந்த வாடிக்கையாளர்கள்
Published on

சென்னை:

சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சில நாட்களுக்கு முன் லாக்கர்களை உடைத்து அதில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுதொடர்பாக வங்கி செயல்படும் கட்டிடத்தின் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த சபின்லால் சந்த் தனது மகனுடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இருவரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பல மார்க்கத்தில் பின்தொடர்ந்து மடக்கி பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த வங்கியில் பலர் லாக்கர்கள் ஒதுக்கீடு பெற்று அதில் தங்களது நகைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதற்கான சாவிகளில் ஒன்று வங்கி மேலாளரிடமும், மற்றொன்று வாடிக்கையாளரிடமும் இருக்கும்.

இருவரும் சேர்ந்து சாவி போட்டு திறந்தால்தான் லாக்கரை திறக்க முடியும். தற்போது இந்த லாக்கர்களில் 259 மற்றும் 654 ஆகிய இரு லாக்கர்கள் மட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த லாக்கர்கள் மிகவும் கடினமானது. வெல்டிங் எந்திரம் மூலம் தான் இதை உடைக்க முடியும். அந்த அளவுக்கு பாதுகாப்பானது. கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் 2 லாக்கர்களையே உடைத்துள்ளனர். அதற்குள் கேஸ் தீர்ந்துவிட்டதால் மற்ற லாக்கர்கள் தப்பின.

தற்போது உடைக்கப்பட்ட 2 லாக்கர்களில் ஒன்று மரியா அன்பழகன் என்பவருக்கும் மற்றொன்று சுசித்ரா என்பவருக்கும் சொந்தமானது ஆகும். மரியா அன்பழகன் சென்னையிலும் சுசித்ரா அபுதாபியிலும் வசிக்கிறார்கள்.

அவர்களது ஒரு லாக்கரில் வைரகற்கள், நகைகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு லாக்கரில் ரூ.2.3 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் தங்கம், வெள்ளி நகைகள் இருந்தன.

வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் கே.கே.நகர் போலீசார் இவர்கள் இருவரிடமும் முறைப்படி புகார் பெற்றுக் கொண்டனர்.

லாக்கர்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து லாக்கரில் உள்ள நகைகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு வங்கி சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக லாக்கர்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைக்குள் சென்று லாக்கரை திறந்து நகைகளை சரிபார்த்தனர். இதற்காக விடுமுறை தினமான நாளையும் மறுநாளும் வங்கி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தப்பிச் சென்ற காவலாளி மற்றும் அவரது மகன் பற்றிய விவரங்களை நேபாள போலீசுக்கு தகவல் கொடுத்து இருவரையும் பிடித்து கொடுக்க உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

காவலாளியும் அவரது மகனும் திருவள்ளூர் அருகே வெள்ளவேடு என்ற இடத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அந்த வீட்டை போலீசார் கண்டுபிடித்து சோதனை நடத்தினார்கள். அங்கு அவர்களது போட்டோக்களும், அடையாள அட்டைகளும் சிக்கியது. இதன் மூலம் கொள்ளையர்களின் நேபாள விலாசம் தெரிய வந்தது. இதை வைத்து ஒரு தனிப்படை நேபாளம் விரைந்துள்ளது.

வெள்ளவேடு வீட்டில் காவலாளியுடன் அவரது மனைவி சுஷ்மா (35), மகள் புஷ்பா (14) ஆகியோரும் தங்கி இருந்தனர். மனைவி, மகளை அவர் 2 மாதத்துக்கு முன்பே நேபாளத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார். தந்தை வேலைக்கு சென்ற பின்பு மகன் மட்டுமே இங்கு தனியாக தங்கி இருந்ததாக பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே காவலாளி நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை என்பதால் தந்தையும் மகனும் சேர்ந்து நிதானமாக கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

வங்கி கொள்ளை தொடர்பாக காவலாளி சபீன்லால், மகன் திலு (18) ஆகியோரை தேடி வருகிறோம். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஆதார் அட்டை, தமிழக அரசின் ரே‌ஷன் கார்டு ஆகியவற்றை கைப்பற்றியுள்ளோம். சபீன்லால் இந்த வங்கி கட்டிடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைபார்த்து வந்துள்ளார்.

வங்கி லாக்கரில் நகை கொள்ளை தொடர்பாக சுசித்ரா, மரியா அன்பழகன் ஆகியோர் நேற்று புகார் கொடுத்துள்ளனர். சுசித்ரா தனது புகாரில் 1 கிலோ (125 சவரன்), தங்கநகைகள், வைர கற்கள், சில்லரை நகைகள் உள்பட ரூ.34 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாகவும், மரியா அன்பழகன் தனது லாக்கரில் இருந்த ரூ.7.46 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை போனதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com