

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோரமான விமான விபத்தில் 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான ரகமான போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன.
இதற்கிடையில், இந்தியாவில் இயக்கப்படும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமா? என்பது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திடம் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் இல்லை. எனினும், இத்தகைய விமானங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் உரிய பரிசோதனைகளை எல்லாம் முறைப்படி கடைபிடித்த பின்னரே விமானங்களை இயக்க வேண்டும் என விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தங்களிடம் இந்த ரகத்தை சேர்ந்த 5 விமானங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று தெரிவித்துள்ளது.
குறைபாடுகள் ஏதுமிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாக போயிங் நிறுவனத்திடமும், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடனும் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. உலகளாவிய அளவில் பல ஆயிரம் மணிநேரம் இந்த விமானங்கள் இதற்கு முன்னர் பறந்துள்ளன. உலகில் உள்ள மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்கள் எல்லாம் இந்த ரகத்தை சேர்ந்த விமானங்களை தொடர்ந்து இயக்கி வருகின்றன.