எட்டயபுரம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே பஸ்களை சீராக இயக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

எட்டயபுரம்:

கோவில்பட்டியில் இருந்து ராஜாபட்டி, துறையூர், ஈராச்சி வழியாக செல்லும் (தடம் எண் 16) டவுன் பஸ்சை சீராக இயக்க வேண்டும். திட்டங்குளத்தில் இருந்து கீழ ஈரால், கசவன்குன்று, செமப்புதூர், அஞ்சுராமன்பட்டி வழியாக செல்லும் (தடம் எண் 3ஏ) டவுன் பஸ்சை சீராக இயக்க வேண்டும். கொடுக்காம்பாறை-கசவன்குன்று, ஈராச்சி விலக்கு-டி.சண்முகபுரம் இடையே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

கசவன்குன்று கிராமத்தில் வாறுகாலை தூர்வார வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், எட்டயபுரம் அருகே குமாரகிரிபுதூர் விலக்கில் நேற்று காலை சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி குமாரகிரிபுதூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு வந்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லையா, மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், கிளை செயலாளர்கள் பால்பாண்டி, சுப்புராஜ், சுப்பிரமணி, உமையராஜ் மற்றும் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, தாசில்தார் அழகர், வருவாய் ஆய்வாளர் கிருபாகரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை ஒரு வாரத்தில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com