ஏர் கண்டிஷனர்கள் இறக்குமதிக்கு தடை -மத்திய அரசு அதிரடி

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஏர் கண்டிஷனர்கள்
ஏர் கண்டிஷனர்கள்
Published on

புதுடெல்லி:

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கடந்த ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் சில புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் டிவி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக, ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்காக இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.

ஏர் கண்டிஷனர்கள் மற்றும் அசெம்பிள் செய்யப்படும் ஏர் கண்டிஷனரில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர்களில் 90 சதவீதம், சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி ஆகிறது. இந்தியாவில் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் இரு நாடுகளின் உற்பத்தி நிறுவனங்களும் கடுமையான சரிவை சந்திக்கும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com