குன்னத்தூரில் இடி இடித்த அதிர்ச்சியில் ஐஸ் வியாபாரி உயிரிழப்பு

குன்னத்தூரில் இடி இடித்த அதிர்ச்சியில் ஐஸ் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடி தாக்குதல்
இடி தாக்குதல்
Published on

குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தோல்காரன் தோட்டத்தில் குடியிருப்பவர் பாலசுந்தரம் (வயது 64). ஊர் ஊராக ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி புஷ்பா கடந்த 19 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு கல்பனா என்ற மகளும் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மகள் கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்திலும், மகன் கோவையிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். பாலசுந்தரம் குன்னத்தூரில் தனியாக சமையல் செய்து கொண்டு ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.

அடிக்கடி மகள் மற்றும் மகன் வந்து பார்த்துச் செல்வார்கள். இரவு சாப்பிட்டு விட்டு படுத்துள்ளார். சுமார் 10 மணிக்கு அந்த பகுதியில் இடியுடன் மழை பெய்துள்ளது. சுமார் அரை மணி நேரம் பலத்த இடி இடித்தது.

பெரிய ஒரு இடி இடித்த போது அய்யோ அம்மா என்று கத்தியுள்ளார். உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அருகே இருப்பவர் யாரும் செல்லவில்லை. அடுத்த நாள் காலையில் அதிக நேரம் செல்போன் ஒலித்ததால் சென்று பார்த்த போது அவர் இறந்துள்ளது தெரியவந்தது. இடி இடித்த அதிர்ச்சியில் ஐஸ் வியாபாரி இறந்தது பெரும் பரப்பாக பேசப்படுகிறது. சோகத்தையும் ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com