

தக்கலை:
தக்கலை அருகே மருதூர் குறிச்சி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் கென்ஸ் (வயது 35). இவர் கேரளாவில் காண்டிராக்டராக உள்ளார்.
இவரது மனைவி மிஸ்பா. இவர்களுக்கு சாயல், ஜெர் சித் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திபு, திபுவென வீட்டிற்குள் புகுந்தனர்.
வீட்டில் இருந்த மிஸ் பாவை கணவன் கண் எதிரிலேயே அந்த கும்பல் தூக்கிச் சென்றது. மனைவி மிஸ்பாவை தூக்கிச் செல்வதை பார்த்த கென்ஸ் தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அந்த கும்பல் கென்சை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தக்கலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மனைவியை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கடத்திச் சென்று விட்டது. அந்த கும்பலிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும். கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
புகார் மனு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் எதிரேயே மனைவி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.