

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டி தென்றல் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். இவருக்கும் மகாலெட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கண்ணன் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.
மகாலெட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இன்று காலை அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது அக்கம் பக்கத்தில் இருந்தவர்ளுக்கு தெரிய வந்தது. நேற்று இரவு தனது மனைவிக்கு கண்ணன் பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை எடுத்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மனைவி மகாலெட்சுமியுடன் கணவர் கண்ணன்.
ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. என் குடும்பத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே பிறந்தவர்கள் தான். தற்போது வரை நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறோம். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பார்க்கும் பிரசவத்தில் கூட தவறு நடக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் நடந்த எந்த பிரசவத்திலும் தவறு நடக்கவில்லை. யாரும் இறந்து போகவும் இல்லை. குழந்தை பெற்றெடுத்த பிறகு என் மனைவி எவ்வித சோர்வும் இல்லாமல் வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார். நான் அவருக்கு சிறிய உதவிகள் மட்டுமே செய்தேன் என்று தெரிவித்தார்.
கண்ணன் மற்றும் அவரது மனைவியிடம் டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ஊசி போட்டுக் கொள்ளுமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியையும் அறுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொப்புள் கொடி தானாக விழ வேண்டும். அப்போதுதான் அதில் இருந்து நச்சுப் பொருட்கள் உடலில் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்று கண்ணனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
வீட்டில் பிரசவம் பார்த்து ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் பெரியவர்கள்தான் பொறுப்பு என போலீசார் தெரிவித்த போது கண்ணனின் தந்தை அவர்களை தரக்குறைவாக பேசினார். இதனால் போலீசாருக்கும் கண்ணன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணனின் தந்தையை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவரது வீட்டுக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு மட்டுமாவது சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு டாக்டர்கள் கேட்டனர். அதற்கு கதவை பூட்டிக் கொண்டு உள்ளே யாரும் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. போலீசார் மற்றும் டாக்டர்கள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.