

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை தொடர்பாக தூத்துக்குடி சிப்காட், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.