

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர்கள் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியை, அதே கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், விசாரணையில் உயர் அதிகாரிகள் குறித்து எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை என தெரிவித்தார்.
அதற்கு அரசுத்தரப்பில், முறையாக விசாரணை நடைபெற்று, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் டிசம்பர் 3-ந் தேதிக்குள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.