

ஆமதாபாத்:
குஜராத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டுக்காக போராடி வரும் ஹர்திக் பட்டேல், இந்த தேர்தலில் காங்கிரசை ஆதரித்தார். தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது:-
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்ற பா.ஜனதாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜனதாவை வேரறுக்க மக்கள் முடிவு செய்தபோதிலும், பணபலம் மூலமும், தில்லுமுல்லு மூலமும் பா.ஜனதா வென்றுள்ளது. இல்லாவிட்டால், காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.
நிறைய இடங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்களின் ‘சீல்’ உடைக்கப்பட்டு இருந்தது. எனவே, அனைத்து கட்சிகளும் ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர இயக்கம் தொடங்க வேண்டும்.
பட்டேல் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் எனக்கு கூட்டம் திரண்டது. அங்கெல்லாம் பா.ஜனதா வெற்றி பெற்றதை ஜீரணிக்க முடியவில்லை. நகர்ப்புற தொகுதிகளின் முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை.
இருப்பினும், பட்டேல் சமூகத்தினருக்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.