

டேராடூன்:
உத்தரகாண்ட் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத், நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியும், மாநில அரசின் செய்தி தொடர்பாளருமான மதன் கவுசிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதைதொடர்ந்து, மதன் கவுசிக் கூறுகையில், “தியாகிகள் பேத்திகளின் திருமணத்துக்கு வழங்கப்பட்டு வந்த 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மந்திரிகள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு, குறைந்தது 45 நாளைக்கு ஒரு தடவையாவது நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.